இரவு
மேய்வதற்குச் சென்றிருந்த கறவை --இரை
வேண்டுமட்டும் சேகரித்த பறவை --கதிர்
ஒய்வதற்குள் வீடடைய
ஒல்லெனவே சென்றதனுள்
ஒடுங்கும் -உள்ளே -இடுங்கும் !
காய்வதனால் இவ்வுலகை அளிப்பான் --வெய்யோன்
கத்துகடல் மூழ்கியுடல் குளிப்பான் --உள்ளே
பாய்வதனால் வெப்பமது
பட்டெனவே சட்டெனவே
பறக்கும் -குளிர்- பிறக்கும் !
செஞ்சுடரை எங்கெங்கும் தேடி --வானில்
சீர்விழிகள் தோன்றுமொரு கோடி -அவை
துஞ்சலின்றித் தேடமதி
தூவிளக்காய் நல்லொளியைத்
தூவும் -வந்து -மேவும் !
கொஞ்சமல்ல வெண்ணிலவின் பெருமை --அதைக்
கூறிடவே சொற்கிடைத்தல் அருமை -நம்
நெஞ்சயள்ளும் கங்குலதன்
நேரிலா இக் காட்சியின்பம்
நிலைக்கும் -துன்பம் -தொலைக்கும் !
மங்கையர்கள் தீபவொளி ஏற்றி --மால்
மருகனவன் நற்புகழைப் போற்றி -நிறை
கொங்குமலர் சூடிடுவார்
கூந்தலிலே ,எங்கும் மணம்
கொழிக்கும் -உவகை-செழிக்கும் !
தங்கணவர் வரவை எதிர் பார்த்தே --அவர்
சாளரத்தை நோக்கி விழி சேர்த்தே -தவிப்பால்
அங்கிங்கும் அலைந்திடுவார்
ஆவலுடன் காத்திருப்பார்
அசைந்து -நெஞ்சம் -இசைந்து !!!
1 comments:
Nice one! I liked it!
Post a Comment