BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, December 11, 2013

உயிர் பெற்ற உயிர் எழுத்துக்கள் -A poem by R. Natarajan-

                                      உயிர் பெற்ற உயிர் எழுத்துக்கள்

(ஆங்கிலத்தில் Spike Milligan என்ற கவிஞர் எழுதிய ' THE ABC " என்ற
 கவிதையை ப் படித்தவுடன்  தோன்றிய உந்துதலில் பிறந்த படைப்பு இது )

விடுமுறை நாளில் விடுதலை கிடைத்ததால் 
ஏட்டை விட்டே எகிறி வெளியே 
உலவச் சென்றனர் உயிரெழுத் தனைவரும்
ஆய்தமும் அட்டைபோல் ஒட்டிக் கொண்டான் .

வேலை இன்றேல் வீண்குழப்பம்   தானே.
அடுத்தவன் தலையில் அழுத்தி" அ"  குட்டினான் .
" ஆ" என  அவனும் அலறித் துடித்தான் .
அடிக்கு அஞ்சி அங்கம் சுருட்டினான்" இ".
ஈ என இளித்திட்டு என்மேல் இரங்கிடு --
நான்காம் நபரோ நடுங்கிச் சொன்னான் .

உ என்றும் ஊ ஊ  என்றும் ஊளையிட்டுத் 
தப்ப எண்ணினர் அடுத்தவர் இருவரும் .
எனைப்போல் நேராய் நிமிர்ந்து நின்றால் 
எப்படி அடிப்பான்  என்றான்" எ"  ஏ ஏ 
வேண்டாம் வம்பு விலகிவா என்றான் ஏ   

"ஐ"யோ  ஐயோ என்று கத்தினான் 
"ஒ "வும் "ஓ "வும்  உள்ளம் கலங்கி 
"ஔ"விடம்  முறையிட அவனும் சொன்னான் :
என்னைப் போல துணையுடன் வந்தால் 
அச்சம் உண்டோ அறிந்து கொள்வீர் .


எஃகு  நெஞ்சத்து ஆய்தம் "ஃ" உரைத்தான் :
அடிப்பவன் அலறிட ஆயுதம் எடுப்போம் 
தடிப்பயல் தானே தணிந்து போவான் .

ஆயுதம் என்றதும் அசட்டுச் சிரிப்புடன் "அ"
விளையாடிப் பார்த்தேன் வினையாய் மாறியது 
வீட்டுக்குப் போகலாம் வருந்துகிறேன் என்றான் 

கூட்டுக்குத் திரும்பும் பறவைகள் போன்றே 
ஏட்டுக்குள் நுழைந்தனர் -இனிதே உறங்கினர் . 

1 comments:

RMK said...


Nice. Novel Attempt.

Best Wishes

RMK