பிள்ளையாரிடம் புலம்பல்
கழுவித் துடைத்த காலைவானம்
கண்ணை உறுத்தித் தொலைக்கிறதே
தழுவித் தவழும் தென்றல்காற்றும்
தாளாத் துயரம் விளைக்கிறதே
குழலின் இசையில் கூட இன்று
குமையும் சோகம் பொழிகிறதே
எழிலும் எரிச்சல் தருகிறதே
என்ன செய்வேன் கணபதியே !
கன்னம் சிவந்த மாலைவானம்
கரிய இருட்டில் முகம்மறைக்கும்
வண்ண நிலவும் நிலைமாறி
வாரி அனலை வீசிடுதே
தின்ன இனிக்கும் பண்டங்கள்
திகட்டி வெறுப்பை உண்டாக்கும்
என்ன வாழ்க்கை கணபதியே
இனியும் சும்மா இருப்பாயோ !
போற்றிப் பார்த்தும் நடக்கவில்லை
தூற்றிப் பேசத் துணிவில்லை
துதித்துச் சொல்லிப் பயனில்லை
மாற்றிப் பாடிப் புலம்புகிறேன்
மனது வைப்பாய் கணபதியே
ஆற்றல் காட்ட மாட்டாயோ
அழைத்தேன் வர நீ மாட்டாயோ !
0 comments:
Post a Comment