BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, March 9, 2014

இறைவன் அருள் --A Poem by R.Natarajan

                                                 இறைவன் அருள்


இறைவாஉன்  குரலினிமை  கேட்க  வேண்டும்
        எனவிரும்பி வேண்டிநின்றான்  மனிதன் , ஆங்கே
சிறையாரும்  குயிலொன்று  கூவிற் றம்மா
        செவிமடுக்க மாட்டாமல் வாடிப் போனான் .
குறையுடனே அவன்கேட்டான்  உன்னைக்  காணக்
        கூடுமோதான் எனக்கென்று . மேலே வானில்
நிறைஒளியைப்  பொழிகின்ற நிலவை நோக்கான் .
        நீஎன்னைத் தொடவேண்டும் என்று ரைத்தான் .


அப்போது  தோள்மேலே அமர்ந்து  கொள்ள
        அழகான வண்ணத்துப்  பூச்சி  ஒன்று
தப்பாமல் வருவதையே பார்த்து  விட்டுத்
        தட்டியதை  விட்டுவிட்டுக் கூவிக் கூவி
ஒப்பாரி வைத்திட்டான் . இறைவன் சொன்னான்
        உன்எண்ணம்  போல்அருள்தான்  வருவ துண்டோ ?
எப்போதும் அருள்செய்வேன் , புரிந்து  கொள்ள
        இயலாமல் வருந்தாதே , உணர்வாய்  உண்மை !
(Adapted from a story published in "THE VISION"-A monthly magazine of Anadashram ,Kanhangad, Kerala,-March 2014 issue)

0 comments: